வந்தவாசி அருகே முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சகோதரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொவளைவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம் (70). இவருக்கு பூபாலன் (45), ராமன்(40), செல்வராஜ் (38) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். பாகப் பிரிவினை தொடர்பாக பூங்காவனத்துக்கும் பூபாலனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பூங்காவனம் தனது வீட்டின்முன் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த பூபாலன், அவரது மனைவி தனலட்சுமி (40) ஆகியோர் பூங்காவனத்தை திட்டினராம். இதை அறிந்து அங்கு வந்த ராமன், செல்வராஜ் ஆகியோர் பதிலுக்கு திட்டினராம்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த பூங்காவனம், தனலட்சுமி ஆகியோர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இரு தரப்பினரின் தனித்தனி புகார்களின் பேரில் இரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸார் பூபாலன், ராமன், செல்வராஜ் ஆகிய 3 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.