வந்தவாசி அருகே நிலத் தகராறு தொடர்பாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
வந்தவாசியை அடுத்த கல்லுகொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆணைக்குட்டி (52). இதே கிராமத்தைச் சேர்ந்த இவரது தம்பி ஏழுமலை (40). இருவருக்கும் விவசாய நிலங்கள் அருகருகே உள்ளன. இருவருக்கும் பொதுவான கிணற்றிலிருந்து நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி ஆணைக்குட்டி தனது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஏழுமலை, பொதுவான வழியில் ஆணைக்குட்டி வைத்திருந்த கத்தரிக்காய் செடியை பிடுங்கி எறிந்தாராம்.
அப்போது, ஏற்பட்ட தகராறில் ஆணைக்குட்டியை ஏழுமலை தாக்கினாராம். இதைத் தொடர்ந்து, ஆணைக்குட்டி, அவரது மனைவி ஆனந்தி, மகன் நந்தகுமார் ஆகியோர் சேர்ந்து ஏழுமலையைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த ஆணைக்குட்டி, ஏழுமலை ஆகிய இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், ஏழுமலை தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து ஆணைக்குட்டி அளித்த புகாரின்பேரில் ஏழுமலை மீதும், ஏழுமலை அளித்த புகாரின்பேரில் ஆணைக்குட்டி, ஆனந்தி, நந்தகுமார் ஆகியோர் மீதும் கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் வியாழக்கிழமை தனித்தனி வழக்குப் பதிந்தனர்.