செங்கத்தில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி புதன்கிழமை இரவு சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலை மேம்பாலம் வரை சாலையின் நடுவே தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரூரில் இருந்து பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி செங்கம் நகருக்குள் புதன்கிழமை இரவு வந்தபோது அந்தச் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் செங்கம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இருப்பினும், மறுநாள் காலை 11 மணி வரை டேங்கர் லாரியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
லாரியில் பெட்ரோல் இருந்ததால் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் அச்சத்தில் இருந்து வந்தனர்.
வெயில் அதிகரித்தால் அங்கு தீ விபத்து நிகழ்ந்துவிடுமோ என போலீஸார், உடனடியாக தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து விபத்து நிகழ்ந்த பகுதியில் தண்ணீர் ஊற்றி வெப்பத்தை தணித்தனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டனர்.
பிற்பகலில் வந்த பெட்ரோல் நிறுவன ஊழியர்கள் டேங்கர் லாரியை அப்புறப்படுத்தினர். இதனால், செங்கத்தில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிக்குள்ளாகினர்.
செங்கம் நகரில் உள்ள இந்த தடுப்புச் சுவரில் அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவது தொடர் நிகழ்வாக உள்ளது. இதனால் நகர மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.