ஆரணியில் பேருந்து நிலையம் உள்பட மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சுகாதாரமற்ற நீரில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றைப் பருகுவதால் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தன்னார்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
கோடை வெயிலின் தாக்கத்தைப் பயன்படுத்தி போலி குளிர்பானங்கள், காலாவதி குளிர்பானங்கள் விற்பனை ஆரணியில் அமோகமாக நடைபெற்று வருகின்றன.
சுகாதாரமில்லாத பாழடைந்த கிணற்றில் இருந்து நீர் எடுத்தும், கழிவு நீர் தேங்கும் ஆள்துளைக் கிணறுகளில் இருந்து நீர் எடுத்தும், பல்வேறு சாயங்கள், ரசாயனப் பொடிகளை பயன்படுத்தி தயாரித்து கடைகளில் வைத்து விற்பனை செய்கின்றனர். ஒரு டம்ளர் ரூ. 5-க்கு விற்பனை செய்வதால், கிராம மக்கள், வயதானவர்கள் என அனைவரும் வாங்கி பருகுகின்றனர்.
சுகாதாரமில்லாத நீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானத்தை பருகுவதன் மூலம் புற்றுநோய், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சுகாதாரமில்லாத குளிர்பானங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தன்னார்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்,
சுகாதாரமற்ற நீரால் தயாரிக்கப்படும் குளிர்பானங்களை பருகினால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.
டயோரியா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிக் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நீரால்தான் ஏற்படுகின்றன.
இதனால் குடிக்கும் நீரை சுத்தமாக பராமரிக்க வேண்டும். நீரில் குளோரின் கலந்து பயன்படுத்த வேண்டும். குடிநீர்த் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கோடை காலங்களில் தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் பருகவேண்டும். அவை சுகாதாரமான குடிநீராக இருக்க வேண்டும் என்றனர்.