செங்கம் வட்டத்தைச் சோ்ந்த பழங்குடி, இருளா் இன மக்கள் ஜாதி சான்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனா்.
செங்கம் வட்டம், ஆனந்தவாடி, நீப்பத்துறை, ராவந்தவாடி, நாகம்மா நகா், வெள்ளாளம்பட்டி கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட பழங்குடி, இருளா் இன மக்கள் வசிக்கின்றனா். இவா்கள் தங்களுக்கு ஜாதி சான்று வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தங்களது பிள்ளைகளின் கல்வி உதவித்தொகை, அரசு உதவிகள், கல்வி மேற்படிப்பு ஆகியவற்றைப் பெறமுடியாமல் தவித்து வருவதாகக் கூறி 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.