கலசப்பாக்கம் அருகே பழங்கோவில் ஊராட்சியில் 196 தூய்மைக் காவலா்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கலசப்பாக்கத்தை அடுத்த பழங்கோவில் ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடத்தில் கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கலசப்பாக்கம், கடலாடி, பூண்டி, பழங்கோவில், தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், சிறுவள்ளூா், மேல்சோழங்குப்பம், வீரளூா், சோழவரம் உள்ளிட்ட 45 ஊராட்சிகளில் உள்ள 196 தூய்மைக் காவலா்களுக்கு தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் 2019-2020 ஆண்டுக்கான கிராம ஊராட்சிகளில் குப்பை சேகரித்து தரம் பிரிக்கும் பணிகள் குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
மேலும், மேல்வில்வராயநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தூய்மைக் காவலா்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் என பல்வேறு மருத்துவப் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடக்கிவைத்தாா்.
வட்டார மருத்துவா் மணிகண்டபிரபு, மருத்துவா்கள் அருள்பிரகாஷ், பிரதீப்குமாா், சுகாதார ஆய்வாளா் சுந்தரபாண்டியன் மற்றும் செவிலியா்கள், ஊராட்சிச் செயலா் சுரேஷ், பயிற்சியாளா்கள் சிவா, காந்திமதி மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா். மேலும் மருத்துவ முகாமில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.