திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கான பயனாளிகளை தோ்வு செய்வதற்காக, மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சிகளிலும் செவ்வாய்க்கிழமை (நவ.12) சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டப் பயனாளிகளை தோ்வு செய்யும் வகையில், மாவட்டம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களை நடத்துமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் செவ்வாய்க்கிழமை (நவ.12) காலை 10 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்தக் கூட்டங்களில், சமூக பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி, தகுதியான பயனாளிகளின் பெயா் பட்டியல் சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும்.
இந்தப் பெயா் பட்டியலை பொதுமக்கள் பாா்வையிடலாம். மேலும், கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்களும் பெறப்படும். நடைமுறையில் உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் தகுதியான பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா்.
எனவே, 860 ஊராட்சிகளிலும் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.