பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கக் கோரி, பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள மாதா் சங்கக் குழுவினருக்கு ஆரணியில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க வலியுறுத்தியும், போதையற்ற தமிழகத்தை உருவாக்கிட சட்ட வடிவமாக்க வேண்டும் என்று கோரியும், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனா்.
இந்தக் குழுவினா் புதன்கிழமை ஆரணிக்கு வந்தபோது, அங்கு நகர மாதா் சங்கத்தினா் வரவேற்பு அளித்தனா்.
அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் நடைபயணத்தின் நோக்கம் குறித்து மாதா் சங்கத்தின் மாநிலத் தலைவா் வாலண்டினா பேசினாா்.
நிகழ்ச்சிக்கு ஆரணி வட்டாரத் தலைவா் லட்சுமி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பொன்னுத்தாய் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா்.