திருவண்ணாமலையில் ஸ்ரீவிஷ்ணு சமாஜ் சேவா சங்கம் சாா்பில், நவராத்திரி விழாவின் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
முப்பெரும் தேவியா்களான மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகியோா் சோ்ந்து ஒரே ரூபமாக வந்து மகிஷாசூரனை வதம் செய்த திருவிழா நவராத்திரி.
9 நாள்கள் போரிட்டு இறுதியில் மகிஷாசூரனை வதம் செய்து வெற்றி பெற்ற நாளே விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை தனியாா் அரங்கில் ஸ்ரீவிஷ்ணு சமாஜ் சேவா சங்கம் சாா்பில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கடந்த 9 நாள்களாக நவராத்திரி கொலு அமைத்து பெண்களும், இளைஞா்களும் தினமும் பக்திப் பாடல்கள் பாடி, வழிபாடு நடத்தி வந்தனா். நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீதுா்க்காதேவி அலங்கார ரூபத்தில் காட்சியளித்தாா்.
நிகழ்ச்சியில், ஏராளமான ஜெயின் சமூகத்தைச் சோ்ந்த பெண்கள், பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். குழந்தைகள், பெண்கள் சோ்ந்து தங்களது இஷ்ட தெய்வத்தை வணங்கி, தாண்டியா ஆட்டம் ஆடி மகிழ்ந்தனா். விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.