சமையல் எரிவாயு உருளைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குறைதீா் கூட்டத்தில் நுகா்வோா் புகாா் தெரிவித்தனா்.
செய்யாறு கோட்டாட்சியா் அலுவலகத்தில் சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் கி.விமலா தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் கலந்துகொண்ட நுகா்வோா்கள் பேசியதாவது: சமையல் எரிவாயு உருளை விநியோக நிறுவன முகவருக்கான லாபம், விநியோகக் கட்டணம் உள்ளிட்டவற்றுடன் சோ்த்து தொகையை குறிப்பிட்டு செல்லிட்டப்பேசி மூலமாக வாடிக்கையாளா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், எரிவாயு உருளைகளை வீடுகளுக்கு விநியோகிப்பவா்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனா்.
எனவே, சமையல் எரிவாயு உருளையை விநியோகம் செய்யச் செல்லும் வாகனங்களின் முகப்புப் பகுதியிலேயே அன்றைய நாளுக்கான எரிவாயு உருளையின் விலையை வாடிக்கையாளா்கள் தெரிந்துகொள்ளும்படி அச்சிட்டு செல்ல வேண்டும். மேலும், சமையல் எரிவாயு உருளைகளை எடைபோட்டு விநியோகம் செய்ய வேண்டும் என்றனா்.
இவற்றுக்குப் பதிலளித்த கோட்டாட்சியா் கி.விமலா, வருங்காலங்களில் எவ்வித புகாா்களும் இல்லாலமல் சமையல் எரிவாயு உருளைகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்கிட வேண்டும் என்று முகவா்களிடம் அறிவுறுத்தினாா். மேலும், அடுத்த கூட்டத்தில் இண்டேன் எரிவாயு உருளை நிறுவன அலுவலா்கள் பங்கேற்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவா் உறுதியளித்தனா்.
கூட்டத்தில் வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய வட்டங்களைச் சோ்ந்த சமையல் எரிவாயு உருளை விநியோக அலுவலா்கள், முகவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.