கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையம், நபார்டு வங்கி ஆகியவை சார்பில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடக்க விழா வந்தவாசியை அடுத்த வழூர் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத் தலைவர் ந.ரமேஷ்ராஜா தலைமை வகித்தார். அறிவியல் மைய தொழில்நுட்ப அலுவலர் வே.சுரேஷ் வரவேற்றார்.
நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஸ்ரீராம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடக்கிவைத்தார். மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், விவசாயிகள் ஆர்வலர் குழு அமைப்பது உள்ளிட்டவை குறித்து அவர் விளக்கிக் கூறினார்.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருள்களை இடைத்தரகர் இல்லாமல் இந்த நிறுவனம் மூலம் அவர்களே விற்பனை செய்யும் வழிமுறைகள் குறித்து வேளாண் விற்பனை, வணிகத் துறை அலுவலர் சண்முகம் விளக்கிக் கூறினார். விழாவில் வழூர் உழவர் மன்றத்தைச் சேர்ந்த வாசுதேவன், சீனிவாசன் மற்றும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.