போளூரை அடுத்த எடப்பிறை ஊராட்சியில் அமைந்துள்ள ராஜகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
எடப்பிறை ஊராட்சியில் பழைமைவாய்ந்த ராஜகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சிதிலமடைந்திருந்ததால், அந்தப் பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து கோயிலை புனரமைத்தனர்.
இதைத் தொடர்ந்து, கும்பாபிஷேக விழா புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை காலை கோ பூஜை, தன பூஜை, கலச சகஸ்ரநாமம், தம்பதி பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர், கோபுர கலசம், மூலவர் ராஜகாளியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில், போளூர், எடப்பிறை, பேட்டை, காங்கேயனூர், வில்வாரணி, எழுவாம்பாடி, மாம்பட்டு உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.