வந்தவாசி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி சுப்பிரமணி (65). இவரது மனைவி பட்டு அம்மாள் (60). இவர்கள் தகரம் வேயப்பட்ட வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டின் அருகிலேயே இவர்களது மகன் குப்பனின் (38) குடிசை வீடு உள்ளது.
இந்த நிலையில், குப்பன் தனது குடும்பத்துடன் சென்னையில் தற்காலிகமாக தங்கி, தச்சுத் தொழில் செய்து வருகிறார். இவரைப் பார்ப்பதற்காக சுப்பிரமணி, பட்டு அம்மாள் ஆகியோர் வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்குச் சென்றனர்.
வியாழக்கிழமை பிற்பகல் சுப்பிரமணியின் வீட்டில் திடீரென தீப்பற்றியது. இதில், வீட்டினுள் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்ததால், குப்பனின் வீட்டிலும் தீப்பற்றியது. இதனால், 2 வீடுகளும் எரிந்து சேதமடைந்தன. மேலும், வீட்டினுள் மரச் சாமான்கள் செய்வதற்காக வைத்திருந்த மரப் பலகைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவையும் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.