திருவண்ணாமலை அருகே சாலையோர புளியமரத்தில் மொபெட் மோதியதில் பலத்த காயமடைந்த வழக்குரைஞரின் உதவியாளர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (40). இவர், திருவண்ணாமலையில் உள்ள ஒரு வழக்குரைஞரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 10-ஆம் தேதி திருவண்ணாமலையில் இருந்து வீட்டுக்கு மொபெட்டில் சென்றுகொண்டிருந்தார். திருவண்ணாமலையை அடுத்த நூக்காம்பாடி கிராமம் செம்மன்குட்டை பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த புளியமரத்தில் மொபெட் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சங்கரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அங்கு அவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.