ஆரணி, வந்தவாசியில் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்று வருகிறது.
விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஆரணி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் சார்பில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் எஸ்.கண்ணகி, மேற்பார்வையாளர் நிலை -1 ந.கற்பகம், மேற்பார்வையாளர் நிலை -2 ச.ராணி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஆர்.விஜய்பாபு, திட்ட உதவியாளர் ஜெ.நந்தினி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே பள்ளியில் உணவுத் திருவிழா: வந்தவாசியை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, போஷன் அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கோ.ஸ்ரீதர் தலைமை வகித்தார். தெள்ளாறு வட்டாரக் கல்வி அலுவலர் இல.ராஜகோபால் விழாவை தொடக்கிவைத்துப் பேசினார்.
ஊட்டச்சத்து அலுவலர் அன்பழகி மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர். மேலும், உணவின் முக்கியத்துவம் குறித்த பாடல்களை சு.அகிலன் பாடினார்.
விழாவையொட்டி, பெற்றோர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தயாரித்த பாரம்பரிய உணவு மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் பா.செல்வரங்கன், கு.கருப்பையா மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.