திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணிடம் நூதன முறையில் 7 பவுன் தங்க நகைகளை ஏமாற்றி வாங்கிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பூர்ணம் (38). இவர், வெள்ளிக்கிழமை திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார். திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் அமர்ந்து ஓய்வெடுத்தபோது தலைக்கவசம் அணிந்தபடி வந்த மர்ம நபர், சம்பூர்ணத்திடம் நான் காவல்துறையில் பணிபுரிகிறேன்.
இங்கு திருடர்கள் அதிகம் சுற்றுகின்றனர். எனவே, நீங்கள் அணிந்துள்ள நகைகளை என்னிடம் கொடுத்துவிடுங்கள். பின்னர் காவல் நிலையத்துக்குச் சென்று நகைகளை வாங்கிக்கொள்ளுங்கள் என்றாராம்.
இதை உண்மை என நம்பிய சம்பூர்ணம், தான் அணிந்திருந்த 7 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலி, கம்மல் ஆகியவற்றைக் கழற்றி அவரிடம் கொடுத்தாராம்.
கிரிவலம் முடிந்த பிறகு காவல் நிலையம் சென்ற சம்பூர்ணம் தன்னிடம் இருந்து வாங்கிய நகைகளை திருப்பிக் கேட்டாராம்.
அப்போதுதான் சம்பூர்ணம் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.