திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 584 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, முதியோர், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, ஜாதிச் சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 584 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
நலத் திட்ட உதவிகள்: குறைதீர் கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம், தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை சார்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் வில்சன் ராஜசேகர், துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஹரிதாஸ், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சு.சரவணன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.