செங்கம் அருகே இருளர் சமுதாய மக்களை மாவட்ட திட்ட அலுவலர் புதன்கிழமை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல்செங்கம் கிராம ஊராட்சி தண்டம்பட்டு பகுதியில் இருளர் சமுதாய மக்கள் சுமார் 50 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். அவர்களை மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
அவரிடம், இருளர் சமுதாய
மக்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சிமென்ட் சாலை, குடிநீர் வசதி, கூடுதலாக தெரு விளக்கு, வீடு இல்லாதவர்களுக்கு அரசின் இலவச வீடு ஆகியவைகள் வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, திட்ட அலுவலர், செங்கம் ஒன்றிய ஆணையர் லட்சுமிநரசிம்மன், வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதேவ் ஆனந்த் ஆகியோரிடம் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அரசு விதிகளின்படி வீடு, சாலை வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, செங்கம் பகுதியில் நடைபெற்ற வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை திட்ட அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பணிகளை தரமாக, விரைவாக செய்துமுடிக்கும்படி ஒப்பந்தாரர்களுக்கு உத்தரவிட்டார்.
பொறியாளர் தமிழரசி, அண்ணாதுரை உள்பட செங்கம் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் உடனிருந்தனர்.