சேத்துப்பட்டு அருகே தடுப்பணை நிரம்பி வழிந்தும் நீர்வரத்தின்றி ஏரி வறண்டு கிடப்பதாக கிராம விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த அரும்பலூர் ஊராட்சி அருகே செய்யாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே அரும்பலூர்-வம்பலூர் இடையே தடுப்பணை அமைக்கவேண்டும் என 2011-2016ஆம் ஆண்டுகளில் போளூர் எம்எல்ஏவாக இருந்த ஜெயசுதாவிடம் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, எம்எல்ஏ ஜெயசுதா 2015-ஆம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதுகுறித்து வலியுறுத்தினார். இதை ஏற்ற அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் தடுப்பணை அமைப்பதாகக் கூறினார்.
அதன்படி, அரும்பலூர்-வம்பலூர் இடையே நபார்டு நிதியுதவியுடன் ரூ. 7 கோடியே 21 லட்சத்தில் தடுப்பணை கட்டப்பட்டது.
இந்தத் தடுப்பணையில் இருந்து ஓதலவாடி கிராமத்தில் 426 ஏக்கரில் அமைந்துள்ள ஏரிக்கு, 3 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது, இந்தக் கால்வாயை மண் கொட்டி மூடி, அதன் வழியாக செய்யாற்றில் இருந்து லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்திச் செல்கின்றனர்.
இதனால் ஆற்றில் தற்போது மழைநீர் தடுப்பணையில் வழிந்தோடுகிறது.
கால்வாயில் ஆற்று நீர் செல்ல முடியாமல் மீண்டும் ஆற்றுக்கே நீர் திரும்புகிறது. இதனால் ஓதலவாடி ஏரி நிரம்பாமல் உள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை (நீர்பாசனத் துறை) உதவி செயற்பொறியாளர் சிவக்
குமாரிடம் கேட்டபோது, ஓதலவாடி கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுப்பதாவும், கால்வாயின் குறுக்கே மண்கொட்டி
கால்வாய் அடைபட்டது குறித்து இதுவரை யாரும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.
இதுகுறித்து அரும்பலூர்
ஓதலவாடி கிராம விவசாயிகள் கூறியதாவது:
சேத்துப்பட்டு வட்டத்தில் இதுவரை அதிகபட்சமாக 82 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும், தொடர் மழையால் வட்டாரத்தில் ஆங்காங்கே ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன.
ஆனால், ஓதலவாடி ஏரிக்கு என அமைக்கப்பட்ட தடுப்பணை நிரம்பி வழிந்தும், ஆற்று நீர் முறையாக வராததால் ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு, மழைநீர் மட்டும் சில இடங்களில் தேங்கியுள்ளன.
எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மணல் கடத்தல் கும்பலைக் கட்டுப்படுத்துவதோடு, கால்வாயையும் தூர்வாரவேண்டும் என்றனர்.