தலைமை ஆசிரியரை மிரட்டி பணம் பறிப்பு: கல்லூரி மாணவர்கள் மூவர் கைது

வந்தவாசி அருகே சைக்கிளில் சென்ற தலைமை ஆசிரியரிடம் வழி கேட்பது போல நடித்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வந்தவாசி அருகே சைக்கிளில் சென்ற தலைமை ஆசிரியரிடம் வழி கேட்பது போல நடித்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முனிகிருஷ்ணன் (52). காஞ்சி
புரம் மாவட்டம்,  தாத்தாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த வியாழக்கிழமை இரவு கீழ்க்கொடுங்காலூர் கிராமத்திலிருந்து தனது வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்றபோது எதிரே பைக்கில் வந்த 3 இளைஞர்கள் இவரிடம் வழி கேட்டனர்.
இதற்காக முனிகிருஷ்ணன் நின்றபோது 3 பேரும் சேர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.1500-ஐ பறித்தனர்.  முனிகிருஷ்ணன் கூச்சலிடவே 
3 பேரும் பைக்கில் தப்பினர். அப்போது 3 பேரில் ஒருவர் தனது செல்லிடப்பேசியை தவறவிட்டுச் சென்றார். 
இதுகுறித்து முனிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸார், வழிப்பறி செய்தவர் தவறவிட்டுச் சென்ற செல்லிடப்பேசியை வைத்து விசாரணை மேற்கொண்டனர். 
இதில், அவர்கள் செய்யாறு அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களான வந்தவாசி ஒட்டர் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன், வந்தவாசி வீராசாமி முதலி தெருவைச் சேர்ந்த மகேந்திரன் (19) மற்றும் வந்தவாசியை அடுத்த ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த யூனுஸ்கான் (18) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவன் கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், மகேந்திரன், யூனுஸ்கான் ஆகியோர் வேலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com