திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் 6 மாத கால இலவசப் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு செவ்வாய்க்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம், சென்னை மா.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், எலைட் சர்க்கிள் ரோட்டரி சங்கம், செந்தமிழ் அறக்கட்டளை இணைந்து 6 மாத கால மகளிருக்கான தையல் பயிற்சி, இளைஞர் மேம்பாட்டுக்கான குளிர் சாதனங்கள் பழுது பார்க்கும் பயிற்சி, கணினி வன்பொருள் பழுது சீர்செய்யும் பயிற்சிகளை நடத்தின.
இந்தப் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் பெ.வள்ளி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தே.ச.கிரிஜா, வாசகர் வட்டத் தலைவர் அ.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மைய நூலகர் சாயிராம் வரவேற்றார். கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் ஏ.சரவணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
விழாவில், ரோட்டரி சங்க நிர்வாகி ராஜன்பாபு, எலைட் சர்க்கிள் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.வடிவேலு, செந்தமிழ் அறக்கட்டளைத் தலைவர் எம்.ராஜசேகர், விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சர்வேசன், குமரன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஞானசுந்தர், தொழில் முனைவோர் பெரியண்ணன், பயிற்றுநர்கள் இளங்கோவன், சக்திவேல், மகளிர் வாசகர் வட்ட இணைச் செயலர் புவனேஸ்வரி, நல் நூலகர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.