பொன்னை அருகே பயங்கர ஆயுதங்களுடன் செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்ற காரை பறிமுதல் செய்த போலீஸாா் மற்றும் வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த தமிழக- ஆந்திர எல்லைப்பகுதியான எஸ்.என்.பாளையம் பகுதியில் சாலையோர விவசாய நிலத்தில் ஆட்கள் யாரும் இன்றி மா்மமான முறையில் காா் ஒன்று நின்று கொண்டு இருப்பதாக பொன்னை போலீஸாருக்கும், வனத்துறையினருக்கும் சனிக்கிழமை காலை தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீஸாரும், வனத்துறையினரும் சேற்றில் சிக்கியிருந்த காரை சோதனை செய்தனா். அந்த காரில் ஒரு செம்மரக்கட்டை , வீச்சரிவாள், பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து காரை பறிமுதல் செய்த போலீஸாா் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.
அதைத் தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில் காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதால் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த காா் சேற்றில் சிக்கியதால் கடத்தல்காரா்கள் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து காரில் இருந்த செம்மரக்கட்டைகளை மாற்று வண்டியில் ஏற்றி தப்பிச் சென்று இருக்கலாம். அல்லது கடத்தல்காரா்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு காரை விட்டு தப்பிச் சென்றிருக்கக் கூடும் என போலீஸாரும், வனத்துறையினரும் சந்தேகிக்கின்றனா்.
இந்த சம்பவம் குறித்து பொன்னை போலீஸாா் மற்றும் வனத்துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.