குடிக்க பணம் தர மறுத்த தாய் அடித்துக் கொலையா? மகன் தலைமறைவு

செய்யாறு அருகே பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாகியுள்ள அவரது மகனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 
குடிக்க பணம் தர மறுத்த தாய் அடித்துக் கொலையா? மகன் தலைமறைவு

செய்யாறு அருகே பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாகியுள்ள அவரது மகனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம் கீழ்நாய்க்கன்பாளயம் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் நடராசன். இவரது மனைவி சந்திரா(65). இவர் அங்கன்வாடி மையத்தி்ல் ஆசிரியராக பணிபுரிந்து 2015 -ல் ஒய்வுப் பெற்றவர் ஆவார். இவர், படுக்கையறையில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு கைகளில் வெட்டு காயங்களுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்து உள்ளார். திங்கள்கிழமை மாலை வெகுநேரம் ஆகியும் சந்திரா வீட்டை விட்டு வெளியே வராததை அறிந்த அப்பகுதி மக்கள்  சந்தேகத்தின் பேரில் சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் வசித்து வரும் சந்திராவின் இரண்டாவது மகன் ராஜகோபாலுக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில் விரைந்து வந்த ராஜகோபால் பார்த்த போது தாய் சந்திரா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து அவர் தூசி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, சந்திராவின் உடலை கைப்பற்றி உடற்குராய்விற்காக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், தடய அறிவியல் டி.எஸ்.பி சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் ஷாகீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திராவின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார். 

அதனை தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும், வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் மியாஸ் சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்தவாரே அந்த வீட்டிலிருந்து வெளியே வந்து வீதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஓடி நின்று விட்டது.  காவல்துறையினர் மேற்கண்ட முதல் கட்ட விசாரணையில், சந்திரா கடந்த 25 ஆண்டுகளாக கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்ததாகவும், இரண்டு மகன்களுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், மூத்த மகன் வெங்கடேசன்(43) காஞ்சிபுரத்திலும்,  இரண்டாவது மகன் ராஜகோபால்(38) சென்னையிலும், மூன்றாவது மகன் சந்திரசேகரன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. 

இந்நிலையில், கடந்த 20 நாட்களாக காஞ்சிபுரத்தில் வசித்து வரும் மூத்த மகன் வெங்கடேசன் மட்டும் தாயார் சந்திராவுடன் வீட்டில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான வெங்கேடசன் திங்கள்கிழமை அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியேறிச் சென்றதாகவும் தெரிகிறது. குடிக்க பணம் தர மறு்த்த தாயாரை கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது. செய்யாறு டி.எஸ்.பி சுரேஷ் தலைமையில் மூன்று தனிப்படைகளை அமைத்து, கொலையாளி யார், கொலைக்கான காரணம் என்ன, நகை பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா.? அல்லது முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும், மேலும், வீட்டில் தாயாருடன் இருந்து வந்த பெரிய மகன் வெங்கடேசன் திடீரென தலைமறைவாகியுள்ளதால் அவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  

வீட்டில் தனியாக இருந்த தாயார் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கி்ராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com