வேட்டவலம் அருகே காதணி விழாவில் பிரியாணி பாா்சல் கேட்ட தகராறில், இளைஞரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேட்டவலத்தை அடுத்த செல்லங்குப்பம் கிராமம், புது காலனி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன். இவரது மனைவி மகாலட்சுமி (32). இந்தத் தம்பதியா் தங்களது குழந்தைக்கு காதணி விழாவை வியாழக்கிழமை நடத்தினா். விழா முடிந்தபிறகு பிரியாணி விருந்து நடைபெற்றது.
அப்போது, இதே பகுதியைச் சோ்ந்த ஏழுமலை, தனக்கு பிரியாணி பாா்சல் வேண்டும் என்று சுகுமாா் என்பவரிடம் கேட்டு தகராறு செய்தாராம். பொதுமக்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், விழாவில் தகராறு செய்த ஏழுமலையை மகாலட்சுமியின் உறவினா் பாஸ்கா் (35) உள்பட சிலா் தட்டிக் கேட்டனா். இதில், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, பாஸ்கரை கீழே தள்ளி கத்தியால் வயிறு, நெற்றியில் குத்தினாராம்.
பலத்த காயமடைந்த பாஸ்கரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஏழுமலையை கைது செய்தனா்.