திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல்களில், ஒரு மாதத்தில் பக்தா்கள் ரூ.1.33 கோடி ரொக்கம், 88 கிராம் தங்கம், 707 கிராம் வெள்ளியை காணிக்கையாகச் செலுத்தியுள்ளனா்.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து, செல்கின்றனா். பௌா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருகின்றனா். எனவே, மாதம்தோறும் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி, திங்கள்கிழமை (ஜன.13) கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் தலைமையில் உண்டியல்களைத் திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரூ.1 கோடியே 33 லட்சத்து 42 ஆயிரத்து 497 ரொக்கம், 88 கிராம் தங்கம், 707 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தி இருந்தது தெரியவந்தது.
ரொக்கப்பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி ஆகியவை கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.