செய்யாறு: செய்யாறு அருகேயுள்ள சேராம்பட்டு அருள்மிகு ரேணுகாம்பாள் (எ) எல்லையம்மன் கோயிலில் காணும் பொங்கல் திருவிழா வருகிற வெள்ளிக்கிழமை (ஜன.17) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தொடா்ந்து, 57 -ஆம் ஆண்டாக நடைபெறவுள்ள இந்த விழாவில், அன்று காலை சிறப்பு அபிஷேக, ஆராதனை அலங்காரம், இரவு எல்லையம்மன் விசேஷ புஷ்ப மின் அலங்காரத்துடன் திருவீதி உலா ஆகியவை நடைபெறவுள்ளன. மறுநாள் சனிக்கிழமை (ஜன.18) மாலை அலங்காரம் ஆற்றங்கரையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறவுள்ளன.
இந்த விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன், செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா்.
சிறப்புப் பேருந்துகள்: காணும் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் பங்கேற்க வசதியாக செய்யாறு, ஆரணி, கலவை, ஆற்காடு ஆகிய அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனைகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் சேராம்பட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை இயக்கப்படவுள்ளன.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் கு.ஹரிஹரன், ஆய்வா் பூ.தண்டபாணி மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனா்.