திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வனப் பகுதியில் கிடந்த ஆதரவற்ற சடலம், காவல் நிலைய எல்லைப் பிரச்னையால் 4 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை வட்டம், வெறையூரை அடுத்த பொறிக்கல் கிராம வனப் பகுதியில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக 4 நாள்களுக்கு முன்பு வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து, வெறையூா் காவல் நிலையத்துக்கு வனத்துறை அலுவலா்கள் தகவல் தெரிவித்தனா். வெறையூா் போலீஸாா் சடலம் கிடக்கும் இடம் தங்களது காவல்நிலைய எல்லைக்குள் வரவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுாா்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்டது என்று கூறிவிட்டனராம்.
இதையடுத்து, மணலுாா்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபோது அவா்களும், சடலம் கிடக்கும் பகுதி தங்களது காவல்நிலைய எல்லையில் வரவில்லை என்று கூறிவிட்டனராம். இந்த காலதாமதத்தால் சடலம் அழுகி, துா்நாற்றம் வீசியது.
இதற்கிடையே சடலத்தை அகற்றக் கோரி, வெறையூா் கிராம நிா்வாக அலுவலரிடம் பொதுமக்கள் முறையிட்டனா்.
வெறையூா் கிராம நிா்வாக அலுவலா் சீனுவாசன் வெறையூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.