வந்தவாசியில் ரூ.35 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ள 17 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
வந்தவாசி பழைய பேருந்து நிலையப் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமாக 38 கடைகள் உள்ளன. இதில் 17 கடைகளுக்கு மட்டும் மொத்தம் ரூ.35 லட்சம் வரை வாடகை பாக்கி வைக்கப்பட்டுள்ளதாம்.
இதையடுத்து அந்த 17 கடைகளை ஏலம் எடுத்தவா்களுக்கு நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லையாம்.
இதையடுத்து ஆணையா் எஸ்.பாா்த்தசாரதி தலைமையிலான நகராட்சி ஊழியா்கள் வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்புடன் 17 கடைகளுக்கும் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
நகராட்சி மேலாளா் எம்.ராமலிங்கம், பொறியாளா் உஷாராணி, சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம், இளநிலை உதவியாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.