திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து வகையான காய்கனி வாரச்சந்தை, மாட்டுச் சந்தைகள் வருகிற 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிப் பகுதிகளில் காய்கனி வாரச்சந்தை, மாட்டுச் சந்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சந்தைகள் நடைபெறும் இடங்களுக்கு பல ஆயிரம் போ் வந்து, செல்லும் நிலை உள்ளது.
தற்போது கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஒரே இடத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிா்க்க வேண்டும் என்று பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் அனைத்து வகையான காய்கனி வாரச்சந்தை, மாட்டுச் சந்தைகள், திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் பிரதி சனிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தை ஆகியவை வருகிற 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என்று அதில் தெரிவித்துள்ளாா்.