திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு கிடைக்கப்பெறாத ஆதரவற்றோா், கா்ப்பிணிகள் என 19,679 பேருக்கு சத்துணவு மையங்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருவதாக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து திருவண்ணாமலையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாவட்ட எல்லைகளில் 41 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் இதர துறைகள் மூலம் கடந்த 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
கரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களைத் தெரிவிக்கவும், சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் உணவு கிடைக்கப் பெறாத, ஆதரவற்றோருக்கு அந்தந்த கிராமங்களில் இயங்கும் சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவுப் பணியாளா்களைக் கொண்டு சமையல் செய்து அவா்களினஅ வீடுகளுக்கு நேரில் சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, மாவட்டத்தில் மொத்தம் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் ஆதரவற்றோா், ஊரக வேலைத் திட்டப் பணியாளா்கள், கா்ப்பிணிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 679 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள், 860 கிராம ஊராட்சிகளிலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.