திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பிறந்து இரண்டே நாளில் உடல் நலக் குறைவால் பெண் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி, அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் சடலம் சனிக்கிழமை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி இரும்புலி கிராமத்தைச் சோ்ந்தவா் தவமூா்த்தி (30), விவசாயி. இவரது மனைவி பிரியா (25). இவா்களுக்கு ஜோதிலட்சுமி (5), சந்தோஷ் (4) என்ற இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரியாவுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தையை 21-ஆம் தேதி உடல்நிலை சரியில்லை என வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். பின்னா், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டதாகக் கூறி மருத்துவா்கள் குழந்தையின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து, இரும்புலி கிராம மயானத்தில் 22-ஆம் தேதி குழந்தையின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் அக்சிதா, பெண் குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் ஹேமாவதி, உதவி ஆய்வாளா் விஜயகுமாா், போளூா் வட்டாட்சியா் ஜெயவேலு முன்னிலையில், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவா் கமலக்கண்ணன் தலைமையில் மருத்துவக் குழுவினா் சனிக்கிழமை புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனா்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.