இடி தாக்கி சேதமடைந்த மேல்வில்வராயநல்லூா் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் குன்றின் மீது அலா்மேல்மங்கை உடனுறை ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி சாதனம் மற்றும் மேல்கூரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் சேதமடைந்தது.
இதனால் பக்தா்கள், ஊராட்சி மன்றத் தலைவா் நிலவழகி பொய்யாமொழி ஆகியோா் கோயிலை சீரமைக்க வேண்டும் எனக் கோரி, தொகுதி எம்எல்ஏ பன்னீா்செல்வத்திடம் கோரிக்கை வைத்தனா்.
இதுகுறித்து, எம்எல்ஏ இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் பரிந்துரை செய்தாா்.
இதன் பேரில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமன், எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் ஆகியோா் கோயிலை சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, கோயிலை சீரமைக்க ரூ.ஒரு லட்சம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.