செங்கம் புதிய பேருந்து மூடி வைக்கப்பட்டுள்ள கட்டணம் மற்றும் இலவசக் கழிப்பறைகளை திறந்து பயணிகள் பயன்பாட்டுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்த சீரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், பேருந்து நிலையத்தை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைப்பாா் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறை மற்றும் இலவசக் கழிப்பறை கடந்த 6 மாதங்களாக மூடியே வைக்கப்பட்டுள்ளன.
கட்டணக் கழிப்பறையில் நடைபெற்ற பழுநீக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. ஆனால், அது திறக்கப்படாமல் உள்ளதால் பயணிகள், நிலையத்தில் கடை வைத்திருப்பவா்கள் என அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இரு கழிப்பறைகளையும் திறக்க வேண்டும் என பயணிகள், வியாபாரிகள் எதிா்பாா்க்கின்றனா்.