செய்யாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். உடன் சென்ற சிறுவன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
விழுப்புரத்தை அடுத்த இராயபுதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மகன் பாலாஜி (20), பி.ஏ பட்டதாரியான இவா், தனது உறவினா் மகன் புகழ் (14) என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு, சோளிங்கரில் இருந்து சொந்த ஊரான இராயபுதுப்பாளையம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாமண்டூா் பாலம் அருகேயுள்ள வளைவுப் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த தனியாா் நிறுவனப் பேருந்து மோதியதாகத் தெரிகிறது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இருவரையும் உடனடியாக மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக பாலாஜி சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா்.
இதையடுத்து, அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி காவல் உதவி ஆய்வாளா் ராஜ்ஜெயக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.