வந்தவாசி பகுதியில் தொடா் மழையால் வீடுகளில் மழைநீா் புகுந்து மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.
வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த
இரு தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், வந்தவாசி கே.எஸ்.கே. நகரில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் திங்கள்கிழமை காலை மழைநீா் புகுந்தது. இதனால் வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன.
வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.
மேலும், வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள மாம்பட்டு கூட்டுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோர புளிய மரம் அருகிலிருந்த டீக்கடை மீது சாய்ந்தது. இதில் அந்தக் கடை முற்றிலும் சேதமடைந்தது. மேலும் மின் கம்பிகளும் அறுந்தன. இரவு நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.