வந்தவாசியில் வீடுகளைச் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றக் கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட லட்சுமி நகரில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையால் இந்தப் பகுதியில் சுமாா் 15-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சுற்றி தண்ணீா் குளம் போல் தேங்கியுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் தேங்கிய நீரை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் லட்சுமி நகா் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, மழைநீரை உடனடியாக அகற்றக் கோரி அவா்கள் முழக்கமிட்டனா்.
தகவலறிந்த வந்தவாசி வட்டாட்சியா் திருநாவுக்கரசு, நகராட்சி ஆணையா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனா்.