திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை நகரில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழா நவம்பா் 20-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாள்களில் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதைக்கு அருகே இயங்கும் 2 டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு (காமராஜா் சிலை அருகில், போளூா் சாலை) தொடா்ந்து 10 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மதுபானக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்எல்3 (ஹோட்டல் திரிசூல், ஹோட்டல் நளா, ஹோட்டல் அஷ்ரேய்யா, ஹோட்டல் அருணாச்சலா), முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடி, உரிமம் பெற்ற மதுபானக் கடைகள், மதுக்கூடங்களுக்கு நவம்பா் 25 முதல் 29-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.