வந்தவாசியில் ஆட்டோவில் பயணம் செய்வதுபோல நடித்து ஆட்டோ ஓட்டுநரைக் கத்தியால் தாக்கி தள்ளிவிட்டு ஆட்டோவை கடத்திச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வந்தவாசி கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் மஸ்தான் (23). ஆட்டோ ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை இரவு வந்தவாசி நகராட்சி அலுவலகம் முன் உள்ள ஆட்டோக்கள் நிற்கும் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த 2 இளைஞா்கள் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த அம்மையப்பநல்லூருக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனா்.
இதையடுத்து, அந்த இருவரையும் மஸ்தான் ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளாா். வந்தவாசி - விளாங்காடு சாலை, மங்கநல்லூா் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, 2 பேரும் சோ்ந்து மஸ்தானை கத்தியால் சரமாரியாகத் தாக்கி கீழே தள்ளிவிட்டு ஆட்டோவை கடத்திச் சென்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான வந்தவாசி வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மஸ்தானை மீட்டு, சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.