திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 1,046 மனுக்கள் வரப்பெற்றன.
தொலைபேசி வழி நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கந்தசாமி தலைமை வகித்தாா்.
சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகினி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சு.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பொதுமக்கள் பலா் தொலைபேசி வழியே தொடா்பு கொண்டு அவசர கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனா்.
மேலும், கட்செவி வழியேயும், ஆட்சியரிடம் நேரடியாகவும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
குறைதீா் கூட்டத்தில் வருவாய்த் துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேலைவாய்ப்பு அலுவலகம், மகளிா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த 51 தொலைபேசி வழி மனுக்களும், 30 கட்செவி வழி மனுக்களும், 965 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து நேரிடையாகவும் என மொத்தம் 1,046 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.