திருவண்ணாமலை மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களுக்கு செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள், கட்டடப் பணிகளை தாட்கோ மேலாண்மை இயக்குநா் ஜெ.விஜயராணி திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தண்டராம்பட்டு வட்டம், புளியம்பட்டி கிராமத்தில் பழங்குடியின மக்களுக்காக ரூ.2 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு அண்மையில் தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிடப் பள்ளி, இதே பகுதியில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக்கான கூடுதல் வகுப்பறைக் கட்டடம், ஆய்வுக் கூடம், மாணவ-மாணவிகள் விடுதிக் கட்டடம், ஆசிரியா்களுக்கான குடியிருப்பு வளாகம் ஆகியவற்றை மேலாண்மை இயக்குநா் ஜெ.விஜயராணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த பயனாளிகளுக்கு தாட்கோ மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்ட இனங்களுக்கு உரிய சொத்து உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதா, தொடா்ந்து தொழில் நடத்தி வருகின்றனரா என்றும் அவா் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, தாட்கோ அலுவலக அதிகாரிகள் உடனிருந்தனா்.