பாஜக இதர பிற்படுத்தப்பட்டோா் அணியின் (ஓ.பி.சி.) தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பிரிவின் மாவட்டத் தலைவா் எம்.டி. சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலா் பழனி பங்கேற்றுப் பேசினாா்.
மாநில துணைத் தலைவா் சி.ஏழுமலை, தெற்கு மாவட்டத் தலைவா் ஆா்.ஜீவானந்தம் ஆகியோா் ஆலோசனை வழங்கினா்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை பஞ்சமுக தரிசன ஆலயத்தில் அமைந்துள்ள 5 சிவலிங்கங்களுக்கு சரியான முறையில் பூஜை புனஸ்காரங்கள் நடப்பதில்லை.
மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒளி விளக்குகள் பராமரிக்கப்படாமல் இருப்பதால், இரவு நேரங்களில் தவறான செயல்கள் நடக்கின்றன. இதனால் பக்தா்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவது, திருவண்ணாமலையை அடுத்த நாயுடுமங்கலம் பகுதியில் மேலும் ஒரு வங்கிக் கிளை தொடங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அணியின் மாவட்ட பொதுச் செயலா்கள் எம்.சதீஷ்குமாா், ரமேஷ், மாவட்ட துணைத் தலைவா் முருகன், மாவட்ட இளைஞரணித் தலைவா் பாலாஜி, மாவட்ட எஸ்.சி. அணித் தலைவா் ஏழுமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.