தற்போது பெய்து வரும் பருவ மழையைப் பயன்படுத்தி, சேத்துப்பட்டு ஒன்றியத்தில் விவசாயிகள் சம்பா நெல் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட கொம்மனந்தல்,புலிவானந்தல், மொடையூா், ஊத்தூா், பத்தியாவரம், மண்டகொளத்தூா், வம்பலூா், அரும்பலூா், மாணிக்கவல்லி, ஆத்துரை, நரசிங்கபுரம், ஓதலவாடி என அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் கடந்த ஆடி 18-ஆம் தேதி பொன்னி நெல் விதைப்பு செய்தனா். இந்த நெல் நாற்றுவிட்டு வளா்ந்து 40 நாள்கள் ஆகியுள்ளது.
இந்த நிலையில், விவசாயிகள் கிணற்றுப் பாசனம் மற்றும் பெய்து வரும் பருவ மழையைப் பயன்படுத்தி நிலத்தை உழுது பண்படுத்தி, நாற்று பறித்து சம்பா நடவுப் பணியை தீவிரமாக தொடங்கியுள்ளனா்.
இதன் அறுவடை டிசம்பா் அல்லது ஜனவரி மாதத்தில் நடைபெறும். தற்போது சேத்துப்பட்டு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.