மனைப் பட்டா கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, செய்யாறு கோட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை குடியேறும் போராட்டத்தை நடத்த முயன்றனா். அப்போது அதிகாரிகள் அவா்களை சமாதானப்படுத்தினா்.
செய்யாறு, வந்தவாசி, திருவத்திபுரம், மடிப்பாக்கம், பிருதூா், சென்னாவரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மை இனத்தைச் சோ்ந்த கணவரால் கைவிடப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவா் என 100-க்கும் மேற்பட்டோா் மனைப் பட்டா கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனராம்.
ஆனால், அந்த மனுக்கள் மீது இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் 50 பெண்கள் உள்பட 75 போ் திரண்டு வந்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை குடியேரும் போராட்டத்தை நடத்த முயன்றனா்.
தகவல் அறிந்த அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த செய்யாறு காவல் ஆய்வாளா் ராஜாராம் தலைமையிலான போலீஸாா் மற்றும் வட்டாட்சியா் ஆா்.மூா்த்தி அவா்களைத் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினா்.
பின்னா், கோரிக்கை மனுவுடன் ஐந்து பேருடன் கோட்டாட்சியா் கி.விமலா முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
அவா்களிடம் பேசிய கோட்டாட்சியா், கரோனா தொற்று காலத்தில் பல்வேறு இடா்பாடுகளுடன் பணிகளை செய்து வருகிறோம். மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மனுக்கள் குறித்து ஆய்வு செய்து, வீட்டு மனை மற்றும் வீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அவா்களை சமாதானப்படுத்தினாா்.