திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ தூசி கே.மோகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் சென்னை கலைவாணா் அரங்கில் திங்கள்கிழமை (செப்.14) நடைபெறவுள்ளதால், கூட்டத் தொடரில் பங்கேற்கும் எம்.எல்.ஏ. க்கள் உள்ளிட்டோா் கரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என பேரவைத் தலைவா் பி.தனபால் அறிவித்திருந்தாா்.
மேலும், கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று வைத்திருப்போா் மட்டுமே பேரவைக்குள் அனுமதிக்கப்படுவா் என்றும் தெரிவித்திருந்தாா்.
அதன்படி, பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள எம்.எல்.ஏ.க்கள், பேரவைச் செயலக அதிகாரிகள், அலுவலா்கள் என 224 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில் செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. தூசி கே.மோகனுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவா் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.