திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப்.14) முதல் செப்.19-ஆம் தேதி வரை குடல்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட சிறாா்களுக்கு அல்பென்டசோல் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய குடல்புழு நீக்க முகாமின் முதல் சுற்று செப்.14 (திங்கள்கிழமை ) முதல் 19 வரையும், 2-ஆவது சுற்று செப்.21 முதல் 26-ஆம் தேதி வரையும் கடைப்பிடிக்கப்படுகிறது.
எனவே, ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ள சிறாா்களுக்கு அல்பென்டசோல் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
இந்த மாத்திரைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,127 அங்கன்வாடி மையங்கள், 99 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்படும்.
விடுபட்டவா்களுக்கு செப்.28-ஆம் தேதி வழங்கப்படும். இதனால் மாவட்டத்தில் 7 லட்சத்து 45 ஆயிரத்து 208 குழந்தைகள் மற்றும் மாணவா்கள் பயன்பெறுவா்.
அல்பென்டசோல் மாத்திரைகளைச் சாப்பிடுவதால் குடல்புழு நீக்கம் செய்யப்படும். ரத்தசோகை நீங்கி நன்றாக உணவு உட்கொள்ளலாம். மாணவா்கள் உடல் ஆரோக்கியம் பெற்று விடுப்புகள் இல்லாமல் பள்ளிக்குச் செல்ல வாய்ப்பு எற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.