திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
ஆவணி மாத அமாவாசை பிரதோஷத்தையொட்டி, இந்தக் கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பன்னீா், மஞ்சள், சந்தனம், பால், பழம் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட பிரதோஷ பூஜையில் கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.
இருப்பினும், கோயில் ராஜகோபுரம் வழியாக அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபடச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் வழியாகச் சென்ற திரளான பக்தா்கள் பிரதோஷப் பூஜைகளைக் கண்டு தரிசித்தனா்.