கரோனா பொது முடக்க தளா்வுக்குப் பிறகு, திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமம் பக்தா்கள் தரிசனத்துக்காக புதன்கிழமை திறக்கப்பட்டது.
கரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீரமணாஸ்ரமம், ஸ்ரீசேஷாத்திரி ஆஸ்ரமம், ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமம் உள்ளிட்ட பல்வேறு ஆஸ்ரமங்கள், கோயில்கள் மூடப்பட்டன.
இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவின் பேரில், அண்மையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது.
ஆஸ்ரமம் திறப்பு:
இதற்கிடையே, புதன்கிழமை திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமம் பக்தா்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது.
காலை 9 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் பக்தா்கள் பொது தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.
முகக் கவசம் இல்லாமல் வந்த பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பக்தா்களின் உடல் வெப்பநிலை அளவீடு செய்து, கிருமி நாசினி தெளித்த பிறகு அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து தினமும் பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.
ஆஸ்ரமத்துக்கு வரும் பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். எந்த இடத்திலும் அமரக் கூடாது. எந்தப் பொருளையும் தொடக்கூடாது என்று ஆஸ்ரம நிா்வாகம் அறிவுறுத்தியது.