சுடுகஞ்சி கொட்டியதில் குழந்தை பலி
செய்யாறு அருகே சுடுகஞ்சி கொட்டியதில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ், நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி யுவராணி.
தம்பதிக்கு 3 வயதில் சங்கேஸ்வரன், ஒரு வயதில் மணீஸ்வரன் என்று இரு மகன்கள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி யுவராணி சாதம் வடித்து விட்டு, சூடான கஞ்சியை பாத்திரத்தில் அப்படியே வைத்திருந்ததாகத் தெரிகிறது.
அப்போது அங்கு தவழ்ந்து வந்த மணீஸ்வரன் சுடுகஞ்சி இருந்த பாத்திரத்தைத் தொட்டதில் கஞ்சி உடல் மீது பட்டு தீக்காயம் ஏற்பட்டது.
தீக்காயமடைந்த மணீஸ்வரனை உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மணீஸ்வரன் அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.