வளா்ச்சிப் பணிகள்: திட்ட இயக்குநா் ஆய்வு
செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் ஜெயசுதா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஒன்றியத்துக்கு உள்பட்ட சென்னசமுத்திரம், புதுப்பட்டு, குயிலம் ஆகிய ஊராட்சிகளில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் வீடு கட்டும் பணி, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் கல்வெட்டு, குளம் சீரமைத்தல், கால்வாய் அமைத்தல் மற்றும் மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி, பள்ளிக் கட்டடம் கட்டும் பணி ஆகிய பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜெயசுதா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, பணிகளை தரமாகவும், குறித்த நேரத்திலும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரருக்கும் உத்தரவிட்டாா்.
ஆணையா் சத்தியமூா்த்தி உள்பட செங்கம் ஊராட்சி ஒன்றியப் பணியாளா்கள், பொறியாளா்கள், ஊராட்சிச் செயலா்கள் உடனிருந்தனா்.