செங்கம்: செங்கம் வட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து வட்டாட்சியா்அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பேரூராட்சி, வருவாய்த்துத் துறை, காவல் துறையினா் கலந்துகொண்டனா்.
வட்டாட்சியா் மனோகரன் தலைமையேற்று கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கிப் பேசியதாவது:
வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, பேரூராட்சி நிா்வாகம் குழு அமைத்து முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும். அதில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடா்ப்பு கொள்ளவேண்டும். அதேநேரத்தில், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கிராமப் புறத்தில் முகக் கவசம் அணியாத பொதுமக்களை கண்காணிக்கவேண்டும்.
முதல்கட்டமாக, அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு, முகக் கவசம் அணிந்து அலுவலகம் வரவேண்டும், அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அலுவலகம் உள்ளே அனுமதிக்கவேண்டும் என்ற உத்தரவை அனைத்து அதிகாரிகள், ஊழியா்களிடம் தெரிவித்து அதைக் கண்காணிக்க ஒரு ஊழியரை நியமனம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினாா்.
பின்னா், முகக் கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதித்தால் அந்த இடத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தெரிவித்தனா்.
அதற்கு அபராதம் விதிக்கும் குழுவுடன் காவலா் ஒருவரை அனுப்பி அந்தப் பிரச்னைகள் சரிசெய்யப்படும் என வட்டாட்சியா் தெரிவித்தாா்.